இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை
— தேமொழி —
சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'இன்னா நாற்பது' என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை 40 வெண்பாக்களில் வடித்துக் கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும். இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு. அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது. இப்பாடல் தவிர்த்து இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப்படவில்லை. கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து, அறம் வலியுறுத்தும் நோக்கம் கொண்ட மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 40 என்ற தொகை நூல்கள் என்ற சிறப்பைப் பெறுவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது என்ற நான்கு நூல்கள் மட்டுமே. இவற்றுள் இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறநூல்களாக மக்களை வாழ்வில் நெறிப்படுத்தும் கருத்துகளைக் கொண்டவை. இன்னா நாற்பது வாழ்வில் எவையெவை துன்பம் தருவன என்பவற்றை 'இன்னாதவை' எனக் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்னாதவை என்பவை பாடலின் பொருளுக்கேற்ப ‘இனிமையற்றவை' எனவோ அல்லது ‘தகுதியற்றவை' எனவோ அல்லது 'பயனற்றவை' எனவோ பொருள் கொண்டு அமையும். இதற்கு மாறாக வாழ்வின் 'இனியவை' எவை என்று கூறி அறநெறியை வலியுறுத்துவது இனியவை நாற்பது. இவையிரண்டையும் தவிர்த்து கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே தமிழுக்கே உரிய 'அகம்' 'புறம்' என்ற திணைகளைக் கருப்பொருளாகக் கொண்டவை.
இந்த நூலை யாத்த புலவர் கபிலர் சங்க காலத்து மன்னனான பறம்பு மலையின் அரசன் பாரி வள்ளலின் தோழராக அறியப்படும் கபிலர் அல்லர். இவர் அவருக்கும் பிற்காலத்தவர். ஆனால், இந்நூலுக்கு உரை எழுதிய ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ‘புலனழுக்கற்ற அந்தணாளன்' என்று பாராட்டப்பட்ட சங்கப் புலவர் கபிலர் என்றே தனது உரைநூலின் முகவுரையில் எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவை என்ற பெயர்கொண்ட புலவர் பலர் வாழ்ந்தது போல, கபிலர் என்ற பெயரிலும் புலவர் பலர் இருந்தனர். இன்னா நாற்பது எழுதிய புலவர் கபிலர் சங்கம் மருவிய காலற்றவர் ஆவார்.
ஒவ்வொரு இன்னா நாற்பது பாடலும் நான்கு துன்பம் தரும் தவிர்க்கப்படவேண்டிய கருத்துகளை இன்னா என்று உரைக்கிறது. ஆகவே, 164 (41 X 4) துன்பம் தருவனவற்றைப் பட்டியலிடுகிறார் நூலின் ஆசிரியர் கபிலர். கடவுள் வாழ்த்து தவிர்த்து, இன்னா நாற்பது கூறும் 160 அறநெறிகளைத் தனிமனிதருக்குரியவை எனவும், அரசைக் குறித்துச் சொல்வன எனவும், பொதுவானவை எனவும் பகுத்தும் காணலாம். அன்புடைமை, அறமுடைமை, அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, பொருளுடைமை, நட்பு, கடப்பாடு, ஒப்புரவு குறித்த அறநெறி அறிவுரைகளின் தொகுப்பு இந்த வெண்பாக்கள். 'இன்னா' எனக் காட்டப்படும் ஒவ்வொரு கருத்தும் தவிர்க்கப்பட வேண்டியவையாக, 41 பாடல்களின் ஒவ்வொரு வரிகளின் இறுதியிலும் இடம் பெறுவதால் நூலுக்கு இன்னா நாற்பது என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது.
ஒரு சில கருத்துகள், குறிப்பாக யானைப்படையின் தேவை போன்ற கருத்துகள் இக்காலத்திற்குப் பொருந்தாமல் போகலாம். அவை அக்கால வரலாற்று நிலையையும் வாழ்வியல் முறையையும் அறியத் தருகின்றன. எக்காலத்திற்கும் பொருந்துவதாகும் அறநெறிகள் கூறப்பட்டுள்ளன. தனிமனித ஒழுக்க நெறியை வலியுறுத்தி சமூகத்தின் வாழ்வியலை மேம்படுத்த உதவும் கருத்துகள் இன்னா நாற்பது நூலில் பலவுண்டு.
உதவிய நூல்:
கபிலர் இயற்றிய 'இன்னா நாற்பது'— நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்
உரை, 1925, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.
தமிழ் இணையக் கல்விக்கழகம் - பதிப்பு:
http://www.tamilvu.org/library/l2400/html/l2400bod.htm
நன்றி:
தமிழ் இலக்கியத் தொடரடைவு - முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-INNA40-TEXT.html
___
இன்னா நாற்பது - அறிமுகம்
கடவுள் வாழ்த்து - முக்கண் பகவன் அடி
1. பந்தம் இல்லாத மனையின்
2. பார்ப்பார் இல் கோழியும் நாயும்
3. கொடுங்கோல் மறமன்னர்
4. எருது இல் உழவர்க்கு
5. சிறை இல் கரும்பினை
6. அற மனத்தார் கூறும்
7. ஆற்றல் இலாதான்
8. பகல் போலும் நெஞ்சத்தார்
9. கள் இல்லா மூதூர்
10. பொருள் உணர்வார் இல்வழி
11. உடம்பாடு இல்லாத மனைவி
12. தலை தண்டமாக சுரம்
13. மணி இலா குஞ்சரம்
14. வணர் ஒலி ஐம்பாலார்
15. புல் ஆர் புரவி மணி
16. உண்ணாது வைக்கும் பெரும்பொருள்
17. ஆன்று அவிந்த சான்றோருள்
18. உரன் உடையான் உள்ளம்
19. குலத்து பிறந்தவன்
20. மாரி நாள் கூவும் குயிலின்
21. ஈத்த வகையால்
22. யானை இல் மன்னரை
23. சிறை இல்லா மூதூரின்
24. ஏமல் இல் மூதூர் இருத்தல்
25. நட்டார் இடுக்கண்கள்
26. பெரியாரோடு யாத்த
27. பெருமை உடையாரை
28. கல்லாதான் ஊரும் கலிமா
29. குறி அறியான் மாநாகம்
30. நெடு மரம் நீள் கோட்டு
31. பண் அமையா யாழின்
32. தன்னைத்தான் போற்றாது
33. கள் உண்பான் கூறும்
34. ஒழுக்கம் இலாளர்க்கு உறவு
35. எழிலி உறை நீங்கின்
36. பொருள் இலான் வேளாண்மை
37. நறிய மலர் பெரிது
38. பிறன் மனையாள் பின் நோக்கும்
39. கொடுக்கும் பொருள் இல்லான்
40. அடக்கம் உடையவன்